Sunday, January 06, 2013

அ-புனைவு ‍ வாசிப்பு சவால்


புத்தக வாசிப்பைப் பொறுத்தவரை 2012 மிகவும் சுமாரான ஆண்டு எனக்கு. 2013‍ன் புத்தகக் கண்காட்சி நெருங்கிவிட்ட நிலையில் ஏற்கனவே வாங்கிவைத்து பிரிக்கப்படாமல் இருக்கும் புத்தகங்களே ஏராளம். ஒவ்வொரு புத்தகமும் அது எப்போது படிக்கப்படவேண்டும் என்பதை அப்புத்தகமே தீர்மானிக்கின்றது என்றெல்லாம் எத்தனை காலத்துக்கு ஜல்லி அடிப்பது?? ஆக இவ்வருடத்தில் சற்று திட்டமிட்டு வாசிக்கவும், வாசித்தவை குறித்த எண்ணங்களை சேமித்துக்கொள்ளவும் இந்த வாசிப்பு சவாலை எடுத்துக்கொள்கிறேன்.

புனைவு வாசிக்க ஆர்வம் குறைந்து வருகிறது (பொறுமை குறைந்து வருகிறது என்றும் சொல்லலாம்). வாசிக்கத்துவங்கி பாதியில் நிறுத்தியிருக்கும் புனைவுகளை வாசித்து முடித்தாலே இவ்வருடத்திற்குப் போதுமானதாக இருக்கும். இவ்வருடம் நிறைய அ‍-புனைவுகளும், கவிதைக்ளும் வாசிக்கத் திட்டம்.  இனி ஆட்ட விதிகள்




Levels:

Geek: 4-6 books in at least 2-3 different categories
Dork: 7-10 books in at least 4-5 different categories
Dweeb: 11- 14 books in at least 6-7 different categories
Nerd: 15+ books in at least 8+ different categories

Categories:

* Health, Medicine, Fitness, Wellness
* History- US, World, European, etc
* Religion, Spirituality, Philosophy
* Technology, Engineering, Computers, etc
* Business, Finance, Management
* Sports, Adventure
* Food- Cookbooks, Cooks, Vegan Vegetarianism, etc
* Autobiography, Biography, Memoir
* Art, Photography, Architecture
* Music, Film, TV
* Self Improvement, Self Help, How To
* Home, Garden
* Science-Nature, Weather, Biology, Geology
* Anthropology, Archaeology
* Animals-Insects, Mammals, Dinosaurs, etc
* Family, Relationships, Parenting, Dating, Love
* Crime, Law
* Poetry, Theatre
* Politics, Government, Current Affairs
* Literary Criticism/Theory
* Cultural Studies
* Travel
* Crafts


வகைமைகளை முன்னமே முடிவு செய்துகொள்ளவேண்டிய அவசியமில்லை. ஆனால், வகைக்கு இரண்டு புத்தகங்களை மட்டுமே படிப்பது விரிவான வாசிப்புத்தளம் அமைய உதவும்.

* மேற்குறிப்பிட்ட வகைகளைத்தவிர்த்து வேறு ஏதேனும் தோன்றினாலும் சேர்த்துக்கொள்ளலாம்.

குறிப்பு: நான் எந்தவிதிகளையும் வைத்துக்கொள்ளப் போவதில்லை. இஷ்டம் போல வாசித்துவிட்டு, வருட இறுதியில் மேற்சொன்னபடி வகைப்படித்திப் பார்க்கப் போகிறேன்.

Thanks to http://bookmarktoblog.blogspot.in/

Sunday, December 16, 2012

There is no spoon..




Spoon boy: Do not try and bend the spoon. That's impossible. Instead only try to realize the truth.

Neo: What truth?

Spoon boy: There is no spoon.

Neo: There is no spoon?

Spoon boy: Then you'll see that it is not the spoon that bends, it is only yourself.


எனக்கு மிகவும் பிடித்தமான காட்சிகளில் ஒன்று இது. ஒரு ஸென் தத்துவத்தை இதைவிட எளிமையாக விளக்கிவிட முடியாது. 

இதற்குப் பலவிளக்கங்கள் உண்டு, என்னுடைய புரிதல்
"உண்மையான உண்மை என்று ஏதுமில்லை. நமக்கான உண்மையை நாமே உருவாக்கிக்கொள்கிறோம். ஸ்பூனைப் பற்றிய நம் பௌதீக‌ ஆறிவு அதனை வளைப்பதிலிருந்த்து நம்மைத் தடுக்கிறது. மாயையிலிருந்து விடுபட்டு, மனதின் நம்பிக்கையைப் பொருத்தே உண்மைகள் நிர்மாணிக்கப்படுகின்றன என்பதை உணரும்போது யாவற்றையும் கட்டுப்படுத்தும் ஆற்றலைப் பெறுகிறோம். அதாவது மனம் எதனை முழுமையாக நம்புகிறதோ அதுதான் உண்மை!!"

Saturday, December 01, 2012

"தலாஷ்" - ‍ஒரு பார்வை (Spoiler இன்றி ரத்தமின்றி)




கமல் மற்றும் அமிர் கான் படங்களை வெளியான முதல் சில தினங்களுக்குள் பார்ப்பதை வழக்கமாக்கி சில காலம் ஆகிறது. படம் நன்றாக இல்லையென்றாலும் அதை நாமே பார்த்துதான் முடிவு செய்யவேண்டும். இல்லையெனில் இணைய உலாவரும்போது விமர்சங்கள் கண்ணில்பட்டு, முன்தீர்மானங்களுடன் படம் பார்க்க நேரிடும். ஆக, நாம் முதலில் படத்தை  பார்த்துவிட்டு மற்றவர்களுக்குத் தீர்மானங்களை வழங்கலாம் :‍‍‍‍‍‍‍‍)

* தலாஷை எந்தஅளவுக்கு இருண்மை(Noir)வகைத்திரைப்படமாக வகைப்படுத்தலாமோ அதே அளவுக்கு எமோஷன‌ல் ட்ராமாவாகவும் வகைப்படுத்தலாம்.

* தலாஷ் அதன் சஸ்பென்சால் அல்ல, நடிகர்களின் தேர்ந்த்த நடிப்பால் கவனம் ஈர்க்கிறது.

* மனோரமா‍‍‍  சிக்ஸ் ஃபீட் அன்டர்,ஷாங்காய் போன்ற மெதுவாகச் செல்லும் த்ரில்லர் பட்ங்கள் பிடித்தவர்களுக்கு தலாஷும் பிடிக்கும்.

* க்ளைமாக்ஸ் திருப்பம் குறித்து புகாரில்லை என்றாலும் அதை இன்னும் கொஞ்சம் க்ரிஸ்பாக சொல்லியிருக்கலாம். முடிந்தால் Lays வாங்கிச்செல்லவும்.

* அமிர்கான், நவாஸுதின் சித்திக், கரீனா கபூர், ராணிமுகர்ஜி ஆகியோர் இதே வரிசையில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

* நடந்து முடிந்த அசம்பாவிதம் ஒன்றை எப்படியெல்லாம் தடுத்திருக்கலாம் என மனதில் ஓட்டிப்பார்க்கும் காட்சி ஃபரானோ, ஸோயாவோ, ஆமிரோ இல்லை ரீமாவோ யாருடைய உருவாக்கமாக இருந்தாலும்  அவருக்கு பாராட்டுக்கள்.

*  'பார்த்த ஞாபகம் இல்லையோ'வை நினைவுபடுத்தும் 'முஸ்கானே ஜூட்டீ ஹை' பாடலும், 'ஜீலே ஸரா'வும் இன்னும் கொஞ்ச‌ நாட்களுக்குக் ஒலித்துக்கொண்டிருக்கும்.(இசை:சம்பத்)

* என்னளவில், தலாஷ் ஆகா ஓகோவெல்லாம் இல்லையென்றாலும் கண்டிப்பாக பார்க்கக்கூடிய படம், அமிர்கானுக்காகவாவது...

Saturday, July 02, 2011

டெல்லி பெல்லி சில்லி!!


டெல்லி பெல்லி ஒரு திராபை. ஆமிர்கான் பேனராயிற்றே என்று நம்ம்பி போனால் கெட்ட கெட்ட வார்த்தைகளில் வைகிறார், அதுவும் 90 நிமிடங்களும் வைகிறார்.அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக திரையில் காட்டப்படும் அசிங்கங்களால் நகைச்சுவையுணர்வைத் தூண்டமுடியாது என்ற அடிப்படை, கானுக்கு தெரியாமல் போனது ஆச்சரியம்தான். படத்தில் கெட்டவார்த்தைகள் போக மீதமுள்ள வசனங்களை ஒரு பஸ்டிக்கெட்டின் பின்புறம் எழுதிவிடலாம்(க்ளிஷெ..க்ளிஷே).கதை என்று ஒன்றும் பெரிதாக இல்லை, அது இல்லாமலேயே துரத்தல்‍‍‍‍‍‍‍‍‍‍ ‍-ஆள்மாறாட்ட வகை படங்களை சிறப்பாக எடுக்கமுடியும்.ஆனால்,ஆயத்தகாட்சிகள் முடிந்து சுவாரசியம் தொடங்கும்போது படம் முடிந்துவிடுகிறது. படத்தில் வரும் "ஆய்" காட்சிகள் சிரிப்புக்குபதில் அருவெறுப்பைத்தான் தருகின்றன(இந்த சமயத்தில், பேசும் படத்தில் கமல் "ஆய்" காமெடியை 'கையாண்ட' விதத்தை வியக்காமல் இருக்கமுடியவில்லை ;) )

எல்லா வாக்கியங்களையும் கெட்ட வார்த்தைகளுடன் துவங்கி முடிக்கும் நிறைய வட இந்திய இளைஞர்களை சந்த்திருக்கிறேன், ‍அவர்கள் இந்தப்படத்தைக் கொண்டாடப்போவது உறுதி.
Shit happens,,,,,Oh yeah!!

Tuesday, May 04, 2010

Tuesday Teasers 3

# Grab your current read.
# Let the book fall open to a random page.
# Share with us few “teaser” sentences from that page.
# You also need to share the title of the book that you’re getting your “teaser” from … that way people can have some great book recommendations if they like the teaser you’ve given!
# Please avoid spoilers!

சென்னையில் ஆகாய யாத்திரை

இந்தியாவெங்கும் பிரஸித்தி பெற்ற ஸ்பென்ஸர் நமது சென்னைபுரிக்கு வந்து,
மும்முறை ஆகாய யாத்திரை செய்தார். இவர் ஆகாயத்தில் ஏறும்போது புகைக்கூட்டின் துணையினாலேறி வரும்போது அதைவிட்டு அதனோடு சேந்தாற்போல் மாட்டியிருந்த பாராசூட் என்னும் பெருங்குடையைப் பிடித்து அதன் கீழே தொங்கிக்கொண்டு தமக்கு சிறிதாயினும் அபாயமில்லாதபடி ஷேமமாக வந்திறங்கினார். சற்றேறக்குறைய 3200-அடி உயரம் மட்டும் தான் ஏறினார். அவர் இறங்கி வருகையில் இந்திர லோகத்தினின்று தேவ விமானத்தின் வழியாக யாரோ தேவதை பூமியில் வந்திரங்குவது போலிருந்ததைக் கண்டு
அங்கு வந்திருந்த பல்லாயிரம் பிரஜைகளும் அவருக்குப் பல்லாண்டு பாடி ஆனந்தமடைந்தார்கள்.
- ’ஜநாநந்தினி’ சென்னை 1891 மார்ச்
(ஆசிரியர் அன்பில் எஸ்.வெங்கடாசாரியார்)
புஸ்த. 1. இல 3. பக்கம் 53


சடுதியாக ஒரு அறிமுகம்:
ட்ராவலாக்(travelogue) என்று சொல்லப்படும் பயண இலக்கியங்கள் தமிழில் மிகக்குறைவு. அந்தக்குறையைப் போக்குவதற்காக ‘உலகம் சுற்றிய தமிழன்’ என்று அறியப்படும் திரு ஏ.கே.செட்டியார் தமிழக ஊர்கள், அரிய நிகழ்ச்சிகள் தொடர்பாக கி.பி.1800 முதல் 1950 வரை தமிழில் வெளியான அனைத்து செய்திகளையும் கவனமுடன் தொகுத்து ‘தமிழ் நாடு’ என்ற நூலாக வெளியிட்டுள்ளார். அந்நாளில் ஒவ்வொரு ஊரும் எப்படியிருந்தது என்பது குறித்த விவரணைகளும், ரயில், ஆகாய விமானம் குறித்த செய்திகளும் மிக சிறப்பாக தொகுக்கப்பட்டுள்ளன.
---------------------------------------------------------------------------------------------
நூலின் பெயர்: தமிழ்நாடு
திரட்டி தொகுத்தவர்: ஏ.கே.செட்டியார்
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம்

---------------------------------------------------------------------------------------------


Friday, April 30, 2010

சிதம்பர நினைவுகள் - வாசக அனுபவம்


புத்தகவிமர்சனங்கள் படிக்கும் போது ஒருவித செலக்டிவ் அம்னிஷியா இருப்பது உசிதம். அதாவது புத்தகம் குறித்த மேலோட்டமான விவரங்கள் மட்டும் நினைவில் இருக்கவேண்டும். உதாரணமாக யார் எழுதியது, புத்தகம் குறித்து விமர்சகரின் ஒட்டுமத்த மதிப்பீடு என்ன போன்றவற்றை நினைவில் கொள்ள வேண்டும். ஆனால் நுணுக்கமான விஷயங்கள், சிலாகிப்புகளை மறந்து விடலாம். ஏனெனில் முதல்முறை புத்தகத்தை படிக்கும்போது வாசகனுக்கு நியாயமாக எழவேண்டிய உணர்வுகளை இவை பாதிக்கும். அந்த வகையில் நான் அண்மையில் கண்டெடுத்த ஒரு முத்து “சிதம்பர நினைவுகள்”. இந்த புத்தகத்தைப் பற்றி நிறைய கேள்விபட்டிருந்தாலும், இது குறித்த எந்த விபரமும் நினைவில் இல்லை. சொல்லப்போனால் இதன் ஆசிரியர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பற்றி கேள்விப்பட்டதுகூட கிடையாது. ஆனால், இப்போது எனக்குப் பிடித்தமான புத்தகங்களின் பட்டியலில் சேர்ந்து கொண்டுள்ளது இந்தப் புத்தகம்.

மலையாளக் கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு எழுதிய “சிதம்பர ஸ்மரண” என்ற கட்டுரைத் தொகுதியினை திருமதி கே.வி.ஷைலஜா, சிதம்பர நினைவுகளாகத் தமிழில் ஆக்கித் தந்திருக்கிறார். தனித்தனி சம்பவங்களாக 21 கட்டுரைகளைக் கொண்டுள்ள இந்நூலை சுயசரிதம் என்று வகைப்படுத்துவதும் சரியாகவே இருக்கும். காரணம், புத்தகத்தை படித்து முடிக்கும்போது பாலச்சந்திரன் பற்றிய முழுமையான சித்திரம் வாசகனுக்கு உருவாகும். கட்டுரைகளின் வழியே பாலச்சந்திரன் என்ற கவிஞனை வளர்த்தெடுப்பது இனிய அனுபவம்.

புத்தகத்தின் தலைப்பிலான கட்டுரை(சிதம்பர நினைவுகள்) முதலாவதாக அமைந்துள்ளது. சிதம்பரம் கோவிலில் ஒரு வயது முதிர்ந்த தம்பதிகளைச் சந்திக்கிறார். ஒருவருக்கொருவர் ஆதரவாய், அன்யோன்யமாய் அன்பு செலுத்திக்கொள்ளும் அவர்களைக் கண்டு மனம் நெகிழ்ந்து போகிறார். தள்ளாத வயதில் சொந்த பந்தங்களைத் தாமாகவே பிரிந்து வந்து அவர்கள் வாழும் வாழ்க்கை ஒரு மகத்தான தவம் போலுள்ளது. அப்போது அவருக்கு தன் தாயின் நினைவு வருகிறது. அவரது தனிமை பற்றிய எண்ணம் மனதை சஞ்ஜலப் படுத்துகிறது. பாலச்சந்திரனுக்கும் அவருடைய தாயருக்குமான உறவு மிகுந்த சிக்கலானதாக இருப்பது கட்டுரைகளினூடாக காணக் கிடைக்கிறது. தாய்மீது மிகுந்த பாசம் கொண்டவராக ஆனால் அவரை சரியாக பராமரிக்கத் தவறியதற்காக மிகுந்த குற்ற உணர்ச்சி உடையவராக இருக்கிறார். தன் வீட்டுக்கு பிச்சைகேட்டு வரும் முதியவளிடமும், தென்னாப்பிரிக்காவில் தான் சந்திக்கும் மார்த்தா என்ற மூதாட்டியிடமும் மிகுந்த பிரியத்துடன் நடந்துகொள்ளும் பாலச்சந்திரன் அவர்களில் தன் தாயையே காண்கிறார். தன் தாயிடம் தான் கொண்ட பாசத்தைக் காட்டிலும் அதனை வெளிப்படுத்த முடியாதது குறித்த மன உளைச்சலை கட்டுரைகளில் அதிகம் பதிவுசெய்கிறார்.

இது தவிர, பாலச்சந்திரன் அதிகமாகப் பேசும் மற்றொரு விஷயம் ‘பசி’. கல்லூரியில் படிக்கும்போதே நக்ஸல் இயக்கங்களில் சேர்ந்து, அதன் காரணமாக வீட்டிலிருந்து வெளியேற்றப்படுகிறார். அதுமுதல் துவங்கி வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக ஸ்திர நிலை ஏற்படும்வரை, வறுமையின் ஒவ்வொரு பல்சக்கரத்திலும் அரைபடுகிறது அவரது வாழ்வு. குறிப்பாக பசி அவரை முழுமையாக வென்றெடுக்கிறது. ஒரு திருவோண நாளன்று மிகுந்த பசியுடன் ஒரு வீட்டில் பிச்சை எடுக்கவும் தயங்காதவராக ஆகிறார். அவருக்கு உணவு வழங்கும் அந்த வீட்டில் அவரை கவிஞர் என்பதை நன்கறிந்த ஒரு பெண் இவரைக் கண்டுகொண்டு அதிர்ச்சி அடைகிறார். இதனைவிட தர்மசங்கடமான ஒரு நிலை எந்த கவிஞனுக்கும் ஏற்பட முடியாது. அப்போது அவரது மனநிலையை இவ்வாறு குறிப்பிடுகிறார்.
“கடவுளே! பாதிகூட சாப்பிடலயே, எழுந்து ஓடிவிடலாமா? - வேண்டாம் ஒரு இலை முழுக்க இருக்கும் சோற்றைத் தூக்கியெறியவா?
மதிப்பும் மரியாதையும்விடப் பெரியது பசியும்சோறும் தான்.நான் சலனமின்றி சாப்பிட ஆரம்பித்தேன்.”
மற்றொரு கட்டுரையில், ஒரு காலத்தில் நன்றாக வாழ்ந்து பின்பு பைத்தியம் பிடித்து தெருவில் அலையும் தன் நண்பனைக் கண்டு அவருக்கு நல்ல உடைகள் வாங்கிக் கொடுத்து உணாவகத்துக்கு அழைத்துச்செல்கிறார். அங்கே உணவைக் கண்டதும் பாய்ந்து உண்ணும் தனது நண்பனைக் பற்றி இப்படி சொல்கிறார்.

“பசி இல்லாமல் போக, பைத்தியத்தினால் கூட முடியவில்லையே என்ற துக்கம் என்னுள் ப்ரவாகமெடுத்தது. பசிதான் பரம சத்தியம். பைத்தியம் கூட பசிக்குப் பிறகுதான் என்ற உண்மை எனக்குத் தெளிவாகப் புரிந்தது.”

வறுமை காரணமாக பிள்ளை பெற்றுக்கொள்ள கூடாது என கர்பவதியான தனது மனைவியை மிரட்டி கருக்கலைப்பு செய்வதை சொல்லும் ’கர்பவதம்’ கட்டுரை மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

இந்நூலை சுயசரிதம் என வகைப்படுத்த மற்றொரு காரணம் பாலச்சந்திரனின் எழுத்தில் தொனிக்கும் சத்தியம். தனது பலவீனங்களையும், கொள்கை சார்ந்த சறுக்கல்களையும் தயக்கமின்றி வாசகன் முன் எடுத்துவைக்கிறார். எதிலும் தனது செயல்களை நியாயப்படுத்தும் முயற்சி சற்றும் கிடையாது. ஒரு பாலியல் தொழிலாளியைப் போலீஸிடமிருந்து காப்பாற்றி தன் வீட்டில் அடைக்கலம் கொடுக்கும் கட்டுரையில் அவரது கண்ணியம் வெளிப்படுகிறது. மற்றொரு கட்டுரையில், வீட்டிற்கு வரும் ஊறுகாய் விற்கும் பெண்ணிடம் தவறாக நடக்க முற்பட்டு அடிவாங்கி கூனிக் குறுகி தனது பலவீனமான பக்கத்தை வெளிப்படுத்துகிறார். ஆகச்சிறந்த சுயசரிதங்களில் ஒன்றாக காந்தியின் சத்தியசோதனையக் கொண்டாட காந்தியின் நேர்மைதானே காரணம்!
தொகுப்பில் உள்ள 'தீப்பாதி' மற்றும் 'பைத்தியக்காரன்' கட்டுரைகள்
மிகச்சிறந்த சிறுகதைகளாகக் கொள்ளத்தக்கன. சிவாஜி கணேசனைச் சந்தித்த அனுபவத்தை , ஒரு அடிமட்ட ரசிகனுக்கே உரிய குதூகலத்துடன் ‘மகாநடிகன்’ என்ற கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார்.

இந்த நூலை தமிழில் மொழிபெயர்த்திருக்கும் ஷைலஜாவின் பணி மிகுந்த பாராட்டுக்குரியது. கல்லூரி காலத்தில் தொடர்ந்து சில மொழிபெயர்ப்பு இதழ்களை வாசித்துவந்திருக்கிறேன் என்கிற தகுதியில் என்னால் இதனை உறுதியாகச் சொல்லமுடியும். வழக்கமாக நேரடியான மொழிபெயர்ப்பில் தென்படும் வினோத வார்த்தைப் பிரயோகங்கள் (குறிப்பாக மலையாள மொழிபெயர்ப்பு), வேகத்தை தடைசெய்யும் அதிக்கபடியான வார்த்தைகள் போன்ற உபத்திரவங்கள் இல்லை. மொழிபெயர்ப்பை வாசிக்கிறோம் என்ற எண்ணமே தோன்றா வண்ணம் தெளிந்த நீரோடை போன்ற மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. நூலின் ஆசிரியர் கவிஞர் என்பதால் மங்கிய கவிதை போன்றதொரு நடையில் தான் மொத்தமுமே எழுதப்பட்டிருக்கிறது. இது மொழிபெயர்ப்பாளருக்குக் கூடுதல் சவால். இன்னமும் படிக்கவில்லையென்றால், கண்டிப்பாக வாசிக்கபடவேண்டிய புத்தகங்களின்
பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

Saturday, March 27, 2010

அங்காடித் தெரு



சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களின் விலை சொல்லும் சிறுமி, ஹோட்டலில் தண்ணீர் வைக்கும் சிறுவன், சிக்னலில் டிவி கவர் வாங்கசொல்லி நச்சரிக்கும் சிறுவன் இவர்களைப்பார்க்கும் போதெல்லாம் , ஏன் இவர்களுக்கு மட்டும் இப்படியான வாழ்க்கை அமைந்திருக்கிறது என்று தோன்றும். வாழ சரியான வாய்ப்புகள் வழங்கப்படாத இவர்களின் எதிர்காலம் என்ன என்ற அச்சமும், குற்றவுணர்வும் தோன்றும். அதுபோன்ற சமயங்களில் சட்டென்று கவனத்தைக் கலைத்துக் கொண்டு சொந்தவேலைகளில் மூழ்கிப்போவேன்(வோம்). இவர்களின் வாழ்க்கையை வலியுடன் திரையில் அழுத்தமாகப் பதிந்திருக்கிறார் வசந்தபாலன். குறைகளென்று தேடிச்சொல்ல நிறைய இருந்தாலும், மிகச்சிறந்த படங்களின் வரிசையில் சந்தேகத்திற்கிடமின்றி இடம் பிடிக்கிறது ’அங்காடித்தெரு’. படம் பற்றிய எண்ணங்கள் மனதை அலைக்கழிப்பதால் “கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்” என்பதை மட்டும் சொல்லி பதிவை முடிக்கிறேன்.
There was an error in this gadget